Thursday, July 21, 2011

தேவி ஸ்ரீ கருமாரி



திருவேற்காடு கருமாரி


நாமெல்லாரும் இப்பிறவியில் நம்மை ஈன்றெடுத்த தாயாரை அம்மா என்கிறோம். நூறு வயது வரை வாழ்ந்தாலும் இப்பிறவிக்கு ஒரு தாயார்தான். அடுத்த பிறவியில் யாருடைய வயிறோ? யாரை நாம் அம்மா என அழைத்தபடி எவள் பின்னால் ஓடுவோமோ? அதை யாராலும் அறிய முடியாது. ஆனால் எத்தனையெத்தனை பிறவி எடுத்தாலும் நமக்கென ஒரு தாய் நிரந்தரமாய் இருக்கிறாள். கண்ணையும், கருத்தையும் நம் மீதே பதித்தபடி. அவளை நாம் அழைக்கக் கூடத் தேவையில்லை. தானே வந்து உதவுவாள். அவள் யார்?

அவள் தான் வேற்காட்டு மாரி. ஆம் திருவேற்காடு கருமாரியம்மன் தான் அந்த அகில உலக அன்னை.

வேற்காட்டு மாரி
துன்பங்கள் மிகுந்த தற்கால உலகில் உலகத்தவரின் நம்பிக்கைக்கு கலங்கரை விளக்காக ஆங்காங்கு உள்ள சக்தி பீடங்கள் விளங்கி வருகின்றன. அவ்வாறு உலக மக்களால் போற்றப்படும் தலங்களில் குறிப்பிடும்படியான ஒன்றாக விளங்கி வருகிறது அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருத்தலம் .

சென்னையில் புகழ்பெற்று விளங்கும் சக்தித் திருத்தலங்களில் மகிமை மிக்கது இத்திருத்தலம். அகத்தியருக்கு சிவபெருமான் தம் திருமணக் கோலம் காட்டியருளிய தலம் இத்தலம். அப்பர், சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப் பெற்ற தலம்.

அன்னை கருமாரியம்மன் அருள் வரலாறு

தாய்! ஒரு குழந்தை காணும் முதல் முகம்! அந்தத் தாய் தன் குழந்தையிடம் அளப்பரிய அன்பு கொண்டவள். எனவே குழந்தைகள் அன்னையைத்தான் முதலில் நாடும். தனக்குத் தேவையானவற்றை அன்னையிடம் கூறி அவள் மூலம் தந்தையிடமிருந்து பெறுவதே
குழந்தையின் இயல்பு. அதே போல ஆண்டவனின் அருளை நாடுவோர் முதலில் அன்னையை நாடுவர். அம்மை மனம் கனிந்தால் அப்பனின் அருள் எளிதில் கிடைக்கும். அந்த அன்னை எண்ணிலா வடிவங்களில், எண்ணிலாப் பெயர்களில் எண்ணிலாத் திருக்கோவில்களில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறாள்.

ஏழை, பணக்காரன் முதல் படித்தவன், பாமரன் ஈறாக அவள் பாதம் காண ஓடி வருவர். அனைவருக்கும் அருளும் அன்பு தெய்வம் அவள்! குறை தீர்க்கும் கற்பகவல்லி! நிறை வாழ்வு நல்கும் நித்தில நாயகி!


கருமாரி அம்மன்
கருமாரி பெயர்க் காரணம்

மாரி என்றால் மழை. கருமாரி என்றால் கருமையான மேகம் எனப் பொருள் கொள்ளலாம். ”கருமாரி” என்பதில் நான்கு அட்சரங்கள்.

க – கலைமகள்

ரு – ருத்ரி

மா – திருமகள்

ரீ- ரீங்காரி - ரீங்கார பீடத்தில் உறையும் சக்தி.

கலைமகளும், மலைமகளும், திருமகளும் ஒரு சக்தியாய் உள்வயப்பட்டு ரீங்காரமாகிய ஓங்காரத்திலே உறையும் ஆதிபராசக்தியே அன்னை கருமாரி. அது மட்டுமன்று! க-கஞ்சன் (பிரம்ம தேவன்); ரு – ருத்திரன்; மா – திருமால்; ரீ – ரீங்கார பீடம். ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று ஐந்தொழில்களை நடத்தும் அன்னையின் பெயர், வேற்காட்டின் மூலை முடுக்கெல்லாம் ரீங்காரமாய் அல்லும் பகலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

"மண்ணளக்கும் மகமாயி ஆதி சக்தி கருமாரி
ஈருவாய் கோலம் கொண்டு அருள் பாலிக்கும் அன்னை"



மாரியம்மன் வழிபாடு எங்கும் பரவியுள்ளது . மண்ணளக்கும் மகமாயின் ஆலய்ம் இல்லாத கிராமமே தமிழ் நாட்டில் இல்லை என்று கூறிவிடலாம். மாரி என்றால் மழை. தன்து அருள் மழையைப் பெய்யும் அம்மனுக்கு அதுவே திருநாமமாக அமைந்தது. குறிப்பாக வெயில் காலங்களில் தோன்றும் அம்மை போன்ற கொள்ளை நோய்களை தீர்த்து காப்பவள் மாரியம்மன் என்பது ஐதீகம். அந்த மாரித்தாய் சென்னையில் திருவேற்காட்டில் கருமாரியாக எழுந்தருளி மஞ்சளால் மகிமை புரிந்து, எலுமிச்சம் பழத்திலே அதிசயம் காட்டி , வேப்பிலையால் வெப்பு நோய் தீர்த்து, சாம்பலினால் உயிர் காப்பவளாய் அருள் பாலிக்கின்றாள்.
வேதங்களின் முதல் வடிவாகி தேவதை பதினைந்தை உடன் கொண்டு அசுரனின் உடல் தன்னை மாய்த்து நின்று மாயை சிங்கத்தின் மீது பவனி வரும் பாலாம்பிகை தீராத வினை தீர்க்கும் திருநீறும், சரண் புகுந்தோர்க்கு சாம்பலும் அளித்து பக்தர்களின் குறையாவும் தீர்த்து வைக்கின்றாள். வாருங்கள் இந்த நிறை ஆடி வெள்ளியன்று கருமாரியம்மன் தரிசனம் பெறுவோம்.

தமிழக்த்தின் தொண்டை மண்டலத்தின் பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 32. அவ்ற்றுள் ஒன்று இந்த திருவேற்காடு. திருஞான சமப்ந்தர் இத்தலத்தைப்பற்றி பதிகம் பாடியுள்ளார். இத்தலத்தில் பிரளய காலத்திற்க்குப் பின் வேதங்களே வேல் மரங்களாகி இறைவனை வழிபட்டன. வேலங்காடே வேற்காடு ஆகியது. உலகத்தை சமன் செய்ய தென்னாடு வந்த கும்பமுனி அகத்தியருக்கு சிவபெருமான் திருக்கயிலாய மலையில் தனக்கும் மலையரசன் பொற்பாவை உமையம்மைக்கும் நடந்த திருமண கோலத்தைக் காட்டியருளிய தலம். திருவேற்காட்டில் பாலாம்பிகை என்னும் வேற்கண்ணி அம்மையுடன் வேதபுரீஸ்வரர் திருமணக் கோலத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றார். எனவே இத்தலம் "வட வேதாரண்யம்" என்றும் அழைக்கப்படுகின்றது.

முருகப்பெருமான் சூரனை வதம் செய்ய செல்வதற்கு முன்பு அன்னை உமையவள், மலைமகளிடம் இத்தலத்தில் வேல் வாங்கினார் எனவே அன்னை வேற்கண்ணி என்னும் நாமம் பெற்றாள், வேல் பெற்ற வேலனை காமதேனுவின் மகள் நந்தினியின் பால் கொண்டு அபிஷேகம் செய்தன்ர் தேவர்கள் பால் ஆறாக ஓடியது பொங்கிப்பாய்ந்த அந்த பால் ஆறே இன்று பாலி ஆறு என்று அழைக்கபப்டுகின்றது. அன்னை வேற்கண்ணியை துதித்து வேலவன் அங்கே வேலால் ஒரு தீர்த்தம் அமைத்தான் அதுவே வேலாயுத தீர்த்தமாகும்.

63 நாயன்மார்களுள் சூதாடி சிவனடியார்களுக்கு அமுது படைத்த மூர்க்க நாயனார் அவதரித்த தலம் தான் திருவேற்காடு. அருணகிரி நாதர் பாடிய பெருமையுள்ள தலம் .முர்த்தி தலம் கீர்த்தி என்ற மூன்றினாலும் சிற்ப்பு பெற்ற தலமாகும்.

இவ்வளவு பெருமைகள் பெற்ற தலத்திற்கு அருகில் அன்னை உமையவள் வெள்வேல் மரத்தடியில் புற்றுருவாய் தோன்றி பூலோக மக்களை காத்திட கருமாரியாய் உருவெடுத்து அமர்ந்துள்ளாள். இத்தலத்தில் யாரையும் அரவம் தீண்டுவதில்லை, அவ்வாறு தீண்டினாலும் விஷம் ஏறுவதில்லை. அருள் வாக்கு வழியாக வெளிப்பட்டு அனைவருக்கும் அருள் பாலித்து வரும் அன்னையின் அருள் பெற நாடி வரும் கூட்டம் பல கோடி.

விநாயகர், முருகன், திருமால் , பிரம்மன் பூஜித்த தலம் அஷ்ட திக் பாலகர்கள் வேத நாயகனை பூஜித்த தலம், சூரியன் தன்க்குரிய ஞாயிறன்று அன்னையின் திருநாளாகக் கொண்டு அடியவர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் அன்னையை வேண்டிக் கொண்டதன் பேரில் அதனை ஏற்று ஞாயிறன்று சிற்ப்பு ஆறு கால பூஜை நடைபெறும் தலம்.

திருவேற்காடு பாலாம்பிகையும், திருவலிதாயம் ஜெகதாம்பிகையும், திருவொற்றியூர் வடிவாம்பிகையும் ஒரே நாளில் வழிபட இம்மை, மறுமை எல்லா நன்மைகளையும் அடைவர். ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஆடி மாதத்திலும் தனனை நாடி வரும் பகத்ர்களின் துயர் தீர்க்கும் அன்னையின் வரலாற்றை காண்போம்.

ஆதி பாராசக்தி, அகிலமும் ஈன்ற அன்னை, அருள், அன்பு, அறம் என்னும் மூவிலை சூலம் கைக் கொண்டு முத்தொழில் நடத்தும் அன்னை, மண்ணளக்கும் மகமாயி , துர்க்கை, மகாகாளி, ஆதிபராசக்தி, மகிஷாசுர மர்த்தனி என்ற சொரூபங்களின் மூலம் தான் கருமாரியம்மன். கருமேகம் போன்று கருணை மழையைப் பொழிபவள். துவாபர யுகத்தில் கம்சன் தன் தங்கை தேவகியையும், வசுதேவரையும் சிறையிலடைத்து அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளை கொன்று வந்தான். எட்டாவது குழந்தையாக பரந்தாமன் தேவகி வயிற்றில் கருக்கொண்டான். அப்போது கோகுலத்தில் யசோதையின் வயிற்றில் மாயை என்னும் மகாசக்தி கருக்கொண்டாள். சிறைச்சாலையில் கண்ணன் பிறந்தவுடன் மாயையினால் எல்லோரும் உறங்கி விட்டனர். பிறந்த குழந்தை கண்ணனை வசுதேவர் எடுத்து சென்று கோகுலத்தில் விட்டு விட்டு அங்கிருந்த பெண் குழந்தையை சிறைக்கு எடுத்து வந்தார். மாயை விலகியவுடன் குழந்தை அழுதது. கம்சனுக்கு செய்தி பறந்தது. உடன் விரைந்து வந்த கம்சன் பெண் என்றும் பாராமல் அக்குழந்தையை கொல்ல வாளை வீசினான். அன்னை விசுவரூபம் எடுத்து சிரித்தாள். அடே மூடனே! நான் கருமாறி வந்தவ்ளடா! ஊர் மாறி, பேர் மாறி, உருமாறி, கருமாறி வந்த என்னையா நீ கொல்லப்போகிறாய்! உன்னை கொல்லப் பிறந்தவன் கோகுலத்தின் இருக்கிறாள் என்று மறைந்தாள் அன்னை அவளே ஆதி கருமாரி.


ஒரு சமயம் அரக்கர்களின் அட்டூழியம் அதிகமாகியது தேவர்கள் அவர்களை சமாளிக்க முடியாமல் திணறினர். முக்கண் முதல்வனிடம் சரணடைந்தனர். தன் குழந்தைகளைக் காக்க மாயா அசுரர்களிடம் போரிட முடிவெடுத்த எம்பெருமான் அப்போது தான் செய்யும் ஐந்தொழிலை செய்யும் பொறுப்பை அன்னையிடம் கொடுத்தார். அன்னைக்கு தன் உடம்பில் இருந்து எடுத்த சாம்பலைக் கொடுத்தார் ச்ர்வேஸ்வரன். சாம்பலைப் பெற்ற தாய் தானே சிவமுமாகி, தானே சக்தியாகி திருநீறு கொண்டு புறப்பட்டாள், அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி திருவேற்காடு வந்து ஈருருவாய் கோயில் கொண்டாள். ஒன்று கருணையே வடிவான அமர்ந்த நிலைக் கோலம். ஐம்பூதங்களே அம்மனுக்கு ஐந்தலை நாகமாக குடை பிடிக்க ஞான ஒளி வடிவாக விளங்கும் கோலம் ஒன்று. மற்றொன்று வானளாவிய விசுபரூப கோலம், அகிலம் நடுங்கும் என்று திருமால் வேண்ட கடைக்கண் மட்டுமே காட்டும் கோலம் கொண்டாள், தலை ம்ட்டும் வெளியே தெரிய கரு உருவில் மண்மாதவுடன் ஐக்கியமானாள் அன்னை. பின் கருநாக உருவில் அங்கே அமர்ந்தாள் அன்னை. சிவபெருமானிடம் பெற்ற திருநீறு கொண்டு தேவியவள் தன் இச்சா மந்திர சக்தியால் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, அந்தரி, வானத்தி, பார்ப்பனி என்று உருவெடுத்து காக்கின்றாள். தமக்கையர் அறுவரும் அருகிலிருந்து திரிசூலம் தனை நாட்டி வாழ்வளித்த இறைவி கருமாரி திருவேற்காட்டில் இன்னருள் புரிய குடிகொண்டாள். பின் இந்த கலி காலத்தில் புற்றிலிருந்து தன்க்கொரு கோயில் எழச்செய்து அருள் பாலிக்கின்றாள் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் அன்னை கருமாரி.


ஒரு தைப்பூச நன்னாள் அன்று பொதிய முனி அகத்தியர்,

ஐந்துதலை நாகமணி அம்பிகையே அருளரசி
அனாதியுருக் கொண்டே மாரி

ஐந்தெழுத்தி ஐம்பொறிச்சி ஐம்பூதம் அறியாத
ஆகாமத்தி ஆரணத்தி

ஐம்புலனை நெறி செலுத்தும் அன்பருக்கு துணைபுரியும்
மக்மாயி அனிமா சக்தி

ஐஞ்சக்தி ஐஞ்சிவனை ஆள்கின்ற ஆதி சக்தி
ஐந்தொழில் செய் கரிய மாரி

என்று பாடி துதிக்க அவரை தமிழைப்பரப்ப அன்னை அனுப்பினாள் என்று தலபுராணம் கூறுகின்றது. ஆகவே கருமாரியம்மனுக்கு தைப்பூசத்தை ஒட்டி பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது.

இனி அம்ம்னின் கோவிலை வலம் வருவோம் ஐந்து நிலை இராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது. அதனுள் நுழைந்தவுட்ன் எதிரே அம்மனின் வேப்பமரம். அரசு வேம்பு மரத்தடியில் வேழமுகத்தோன். அன்னைக்கு வலம்புரி சங்கால் அபிஷேகம் செய்த வலம்புரி விநாயகர் அதற்கு பின்புறம் யாக சாலை, உள் பிரகாரத்தை சுற்றி வரும் போது உற்சவர் அம்மனை தரிசிக்கலாம், அம்மையின் சன்னதியின் பின்புறத்திலிருந்து தங்க கவசம் பூண்டுள்ள அன்னையின் விமானத்தை அழகு கண்டு களிக்கலாம். வடக்குப் பிரகாரத்தில் வேற்கண்ணி அம்மையையும், பெரிய கருமாரியம்மனையும், வள்ளி தெய்வாணை சமேத ஆறுமுகனையும் தரிசனம் செய்யலாம். இராஜ் கோபுரத்தின் நுழைவு வாயிலின் ஒரு பக்கம் `நவகிரகங்கள் மறு பக்கம் கருமாரியின் அண்ணன் திருமால் ஏழுமலையானாக கோவில் கொண்டுள்ள சனன்திகள் உள்ளன..வெளிப்பிரகாரம் இப்போது விரிவு செய்யப்பெற்று துர்க்கை, பிரத்தியங்கிரா சனன்தியுடன் விளங்குகின்றது.
கருவறையில் கருமாரி அன்னை ஈருருவாய் காட்சி தருகின்றாள். அமர்ந்த கோலத்தில் தனிப்பெரும் கருணையோடு புன்னகை தவழும் திருமுக மண்டலத்துடன் உடுக்கை, திரிசூலம், வாள், கபாலம் தாங்கி எழிற்கோலம் காட்டுகின்றாள் சிவ சக்தி ரூபமாய் அன்னை. மற்றொரு கோலம் தலை காட்டி உடல் மறைத்த நாரணியாய் மற்றொரு கோலம் கொண்டு அருள் பாலிக்கின்றாள் ஆயிரம் கண்ணுடைய நாயகி, ஆதிபராசக்தி, கண்ணின் கருமணி போன்ற வேற்காட்டுக்கருமாரி. அம்மன் சனனதியின் பிரசாதம் சாம்பல் மற்றும் குங்குமம். அன்னையின் சாம்பல் சிறந்த மருந்து.

திருக்கோவிலுக்கு எதிரே திருச்சாம்பர் திருக்குளம். வேலவன் உருவாக்கியது என்பது ஐதீகம், இக்குளத்தில் ஞாயிரன்று விடியற்காலையில் நீராடி திருநீறு அனீபவர் சகல் செல்வங்களும், கல்வி அறிவும் பெறுவர். ஆடி மாதத்தில் ஆதி வாரம் நீராடுவோர் நீண்ட ஆயுள் பெறுவர். மாசி பௌர்ணமியில் நீராடுவோர் மக்கட்பேறு பெறுவர். மாசி அமாவாசையில் நீராடி நீறு பூசுவோர் பகைவர்களை வெல்வர். தைமாதம் ஆதி வாரம் பூச நட்சத்திரத்தில் நீராடினால் பெறற்கரிய பேறு பெறலாம். தையில் ஞாயிரன்று நீராடுவோர் வல்வினைகள் நீங்கும். அமாவசையில் நீராடினால் பிணி, பில்லி, சூனியம் விலகும். ஆடிப்பூரத்தன்று நீராட நாவன்மை சிரக்கும், கலைகள் விலங்கும். சித்ரா பௌர்ணமியில் நீராட பூரண ஞானம் கிட்டும். புரட்டாசி ஐப்பசி முழுமதி நாட்களில் நீராட ஞானிகளாவர். நவராத்திரியில் நீராட ஆதிசேஷனைப் போல கலைத்திறன் கூடும். பாவம் தொலையும்.

இத்தலத்தின் பெருமை தலபுராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கண்டாலும் பிணிநீங்கும் நிதிபெருகும் கலைஒங்கும்
ஞானமுறும், கருத்துணர்ந்து

விண்டாலும் வாணாட்கள் மிக பெருகும்; செவியுற்றால்
வீரமுறும், வேதை தீரும்

பண்டாலின் கீழமரும் பரமனருள் சிறப்புற்றுப்
பரஞானப் பதமளிக்கும்

மண்டலத்தில் தேவி கருமாரியாளின் புராணச்சீர்
எவராலும் மொழியொணாதே

ஐந்தொழில் புரியும் ஆதி சக்திக்கு வருடம் முழுவதும் திருநாளே. தமிழ் புத்தாண்டன்று தங்க கவசத்தில் சிறப்பு மலர் மாலை அலங்காரத்தில் அருட்கோலம் காட்டுகின்றாள் அன்னை. சித்ரா பௌர்ணமியை ஒட்டி மூன்று தின லட்சார்ச்சணையும், தைப்பூசத்தன்று ஒரு நாள் லட்சார்ச்சனையும் நடைபெற்கின்றது. வைகாசி விசாகத்தன்று சீனிவாசப்பெருமாள் கருட சேவை. ஆனி கடை ஞாயிறு தொடங்கி அன்னை கருமாரிக்கு ஆடிப்பெருவிழா சீருடனும் சிறப்புடனும் நடைபெறுகின்றது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் 1008 பால் குட அபிஷேகம், நவ கலசம், சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, புற்றலங்காரப் 108 பால்குட அபிஷேகம், படையல் போன்றவையும், வாகன சேவையும், ஒன்பதாம் ஞாயிற்றுக்கிழமையன்று காலை தேர் உலாவும் சிறப்பாக நடைபெறுகின்றது. மாதம் தோறும் பௌர்ணமியன்றும், புரட்டாசி நவராத்திரி ஒன்பது தினங்களும் மாலை 108 சுமங்கலிகளை கொண்டு குத்து விளக்கு பூஜை நடத்தப்பெறுகின்றது. நவராத்திரி ஒன்பது தினங்களும் உற்சவர் அம்மன் புறப்பாடு வெவ்வேறு விதமான அலங்காரத்தில் நடைபெறுகின்றது.ஐப்பசியில் கந்தர் சஷ்டி திருவிழா சூர சம்ஹாரத்துடனும், திருக்கல்யாணத்துடனும் சிறப்பாக நடைபெறுகின்றது. தனுர் மாதத்தில் காலை சிறப்பு பூஜை. தை மாதத்தில் தைப்பூசத்தை தீர்த்த நாளாக கொண்டு 19 நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பெறுகின்றது. காலை மாலை இரு வேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் அன்னை சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா. பல்லக்கு தீர்த்த வாரியும் இறுதி மூன்று நாட்கள் தெப்ப உற்சவமும் நடைபெறுகின்றது. அம்மனுக்கு தங்கத்தேரும் உள்ளது, ஆங்கிலப்புத்தாண்டன்றும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் அம்மனுக்கு. சுதந்திர தின நாள் ஆகஸ்ட் 15ம் நாள் அன்றும், அண்ணா நினைவு நாள் அன்றும் பொது விருந்து நடைபெறுகின்றது. இத்திருக்கோவிலின் சார்பாக பல சமுதாயப்பணிகள் நடைபெறுகின்றன. சமயம் கிடைக்கின்ற போது அன்னையின் தலம் சென்று தரிசித்து அவள் அருள் பெறுங்கள்.

"கருமாரி அம்மன் பாமாலை' என்ற இந்தப் பாடல் கருமாரியம்மனை அஷ்டலட்சுமியாக உருவகித்து அமைந்த பாடலாகும். இப்பாடலைப் படித்தவர்களும் படிப்பவர்களும் இதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் அடைந்து பயன் பெற்று வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

இதை எழுதிய டாக்டர் கீதா சுப்ரமணியன் சென்னை பொது மருத்துவமனை இதயவியல் நிபுணர். இவர் ஆசுகவிபோல் எழுதிய கவிதை இது...

1. பூத்திருக்கும் தாமரையே முகமாக
பூசுகின்ற மஞ்சளதின் ஒளியாக
பேசுகின்ற மொழியதுவே கரும்பாக
காசினியில் வந்தவளே கருமாரி! அம்மா கருமாரி!
(ஆதி லட்சுமி)


2. கூறுகின்ற சொல்லதுவே அருளாக
கோருகின்ற வரமதுவே நிறைவாக
ஆறுகின்ற துன்பமது மறைவாக
சோறு தரும் தாயவளே கருமாரி! அம்மா கருமாரி!
(தான்ய லட்சுமி)

3. நேருகின்ற நன்மையெல்லாம் உயர்வாக
நேர்மையது என்றும் நம் குணமாக
மாறுகின்ற வாழ்வினிலே மருந்தாக
பேறு தரும் பெண்ணவளே கருமாரி! அம்மா கருமாரி!
(சந்தான லட்சுமி)

4. சொல்லுகின்ற பாடலிலே பொருளாக
சொந்தமெனும் அன்பினிலே துணையாக
வெல்லுகின்ற செயலினிலே துணிவாக
நல்லதெல்லாம் தருபவளே கருமாரி! அம்மா கருமாரி!
(வீர லட்சுமி)

5. வீசுகின்ற தென்றலதில் மணமாக
மாசில்லா நலம் கொண்ட மனமாக
ஆசி தரும் சொல்லினிலே வளமாக
சுவாசமதில் நின்றவளே கருமாரி! அம்மா கருமாரி!
(தன லட்சுமி)

6. கற்றவர்கள் கருத்தினிலே அறிவாக
உற்றவர்கள் உணர்வினிலே உறவாக
நற்றவர்கள் வாழ்வினிலே தவமாக
புற்றினிலே அமர்ந்தவளே கருமாரி! அம்மா கருமாரி!
(வித்யா லட்சுமி)

7. குன்றினிலே நின்றவனின் தாயாக
கொன்றையது சூடியவன் துணையாக
மன்றினிலே ஆடுபவன் மனையாளாய்
நன்றதுவே தருபவளாம் கருமாரி! அம்மா கருமாரி!
(சௌபாக்ய லட்சுமி)

8. தேடுகின்ற செல்வமதன் பயனாக
பாடுகின்ற பாவினிலே நயமாக
நாடுகின்ற மானுடரின் கதியாக
(நம்) வீடு தேடி வருபவளே கருமாரி! அம்மா கருமாரி!
(விஜய லட்சுமி)

"அலை கடலில் உதித்த ஆதி லக்ஷ்மித்தாயை வரலக்ஷ்மியாக அவரவர்கள் இல்லத்தில் வரவேற்று எப்போதும் எங்கள் இல்லத்தில் தங்கியிரு திருமகளே!" என்று வ்ரம்வேண்டும் நாளன்று முப்பெரும்தேவியாய் அருள் பாலிக்கும் கருமாரியம்மன் தரிசனம் பெற்று உய்வோமாக.

அகில உலகமும் காக்கும் அந்த அன்பு அன்னை கருமாரியைத் தொழுவோம்!
அனைத்து அருளும் பெறுவோம்.

ஓம் சக்தி